search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி அதிபர்கள்"

    லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. #LorryStrike
    சேலம்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கோழித்தீவனம், வெங்காயம், சமையல் எண்ணெய், மைதா, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைப்பட்டுள்ளது.



    தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ஜவுளி, ஜவ்வரிசி, இரும்பு கம்பிகள், மஞ்சள், தீப்பெட்டி, உப்பு, சோப்பு, பட்டாசு, மோட்டார் இயந்திர பாகங்கள், தேங்காய், துணிகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் டன் கணக்கில் தேங்கி உள்ளன. அதேபோல் சரக்கு ரெயில்களில் வந்த பொருட்களை லாரிகளில் ஏற்றாததால் ரெயில்வே கிடங்குகளில் தேங்கி உள்ளன.

    விவசாயப் பொருட்கள் அழுகி வீணாவதோடு, கடும் விலை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதால் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் 7-வது நாளாக லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநில லாரி டிரைவர்கள் கடந்த 7 நாட்களாக வேலை இழந்து பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு, கொண்டலாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, அதில் டிரைவர்கள் படுத்து உறங்குகிறார்கள்.

    நாமக்கல் பைபாஸ், பெங்களூரு பைபாஸ், சென்னை பைபாஸ் சாலைகளில் லாரிகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    லாரிகள் இயங்காததால் சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஜவுளி, இரும்பு கம்பிகள், மஞ்சள், புளி, மளிகை பொருட்கள் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் கோடிக்கணக்கில் பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

    ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடக்கிறது. அதில் ஏலம் விடப்பட்ட 3½ கோடி ரூபாய் மதிப்புள்ள 5,800 மஞ்சள் மூட்டைகள், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 27 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கூட்டுறவு சங்க வளாகம் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் ஏற்றிச்செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

    லாரி ஸ்டிரைக் தொடர்பாக மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசுக்கும், டீசல் பொருட்கள் விற்பனை வரி என 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லாரி அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய், சேலத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. வேலை நிறுத்தத்தால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, 100 கோடி ரூபாய் அளவில் வாடகை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் டிரைவர்கள், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், மினி டோர், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட சிறு வாகனங்களை இயக்கி வந்த 1½ கோடி பேர் 7 நாட்களாக வேலை இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி புக்கிங் அலுவலகங்களில் மலைபோல் தேங்கி உள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், தமிழகத்தில் தொடரும் லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பொருட்கள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. எனவே லாரி உரிமையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைளை தீர்வு காண வேண்டும் என்றார். #LorryStrike
    ×